ஸ்மிருதி இரானிக்கு எதிரான மனு: குஜராத் அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்கும்படி குஜராத் அரசுக்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்திலுள்ள அங்லாவ் பேரவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் அமித் சவ்தா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத்தில் இருந்து தேர்வான மாநிலங்களவை உறுப்பினரான ஸ்மிருதி இரானி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பணிகள் மேற்கொள்வதற்கு ஆனந்த் மாவட்டத்தை தேர்வு செய்தார். இதுபோன்ற பணிகள் மேற்கொள்வதற்கு ஒரு எம்.பி.க்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது.   ஆனால், தனக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை ஸ்மிருதி இரானி தவறாகýó பயன்படுத்தி, ஊழலில் ஈடுபட்டுள்ளார். அவரது நிதியின்கீழ், ஆனந்த் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் பணி, குஜராத் அரசின் ஊரக மேம்பாட்டு நிறுவனத்துக்கு முதலில் ஒதுக்கப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் மூடப்பட்டதால், எஸ்எஸ்எம்கேஎம் என்ற நிறுவனத்துக்கு அந்த பணிகள் ஒதுக்கப்பட்டன. ஸ்மிருதி இரானியின் அறிவுறுத்தலின்பேரில் அந்த நிறுவனத்துக்கு பணிகள் ஒதுக்கப்பட்டதை, அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர்.   பள்ளிகளில் சுற்றுச் சுவர் கட்டுதல், பஞ்சாயத்து அலுவலகம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அந்த நிறுவனத்துக்கு லட்சக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்று மனுவில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.சுபாஷ் ரெட்டி, நீதிபதி வி.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது பதிலளிக்கும்படி குஜராத் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Category: